Wednesday 29 April 2020

எப்போது விடியும் இந்த பொழுது?



விஞ்ஞானத்திற்க்கும் மெய்ஞ்ஞானத்திற்க்கும் மேலாக பல அதிசய மிக்க செயல்களை செய்து வந்த இந்த ஆறாறிவு கொண்ட ஆறடி உயரம் கொண்ட அழகுமிக்கவரும், சிந்தித்து செயலாற்றிட கூடிய அறிவு மிக்கவரும், எதிர்காலத்தை இன்றே கணித்து குறிப்பீடுபவரும், பலமிக்கவரும், கோபத்தின் உச்சியை எட்டியவரும், அதே உச்சத்திலிருந்து தன்னை பச்சிலங் குழந்தையை போல் உடனே மாற்றிக் கொள்ளக் கூடிய சுபவமிக்க வேடதாறியும், பல திறமைகளை தனக்குள்ளே வைத்து கொண்டு ஒய்யரமாய் இருப்பவரும், ஒரு சமுதாயத்தை தம்முடைய சொல் கட்டுக்குள் வைத்திருப்போரும்,

வாழ்வில் குறைநிறைகளை சந்தித்தவரும், நேற்று இன்று நாளை என பல தலைமுறையை சந்தித்தவரும் மலையே புரண்டு வந்தாலும் வீழ்த்திடலாம் என்ற அஞ்ச நெஞ்சத்தோடு வீர வசனஙகள் பேசியோரும் இன்று கண்ணுக்கே தெரியாத உயிரினங்களின் உயரத்தை எட்டாத கிருமியாம் அதனை எண்ணி வீட்டில் தன்னை தானே சிறைப்படுத்தி கொண்டிருக்கிறான் மனிதன் என்ற மானுட பிறவி. இன்று அவன் கூண்டில் அடைத்து வைத்த பறவை, கட்டிப் போட்ட நாய், சிறையிட்ட மற்ற உயிரினங்கள் யாவும் அவனை நோக்கி கேளிச் செய்து சிரிகின்றன. மனிதன் தலைகுனிந்த நிலையில் உள்ளான். அவன் செய்த தவறுகள் யாவற்றையும் கண்களுக்கு முன்பதாக திரையிட்டு பார்க்கிறான். வேதனையில் மெலுகாய் உருகி போகிறான்.

மனையாளின் என்ற தாயின் இல்லதரசியின் துயரை இ்ன்று சமமாக பங்கிட்டு கொள்கிறார்கள் தந்தையும் பிள்ளைகளும். இந்த சமுகத்தில் நிழலுக்கு ஒதுங்கி மீண்டும் இந்த சமூகத்தோடு சேர்ந்து இந்த நாட்டின் வளர்ச்சி சிறக்க பாடுப்பட, இல்லதரசி மட்டும் வீடு என்ற கோட்டைக்குள் எங்கும் வெளியே செல்லாமல் தினம் தினம் சிறைவாசம் செய்து வருவதன் துயர் இப்பொழுது தான் ஆணினத்திற்கு, மற்றும் அவர்தம் பிள்ளைகளுக்கும் தெரிய வந்திருக்கிறது. தூதுவனுக்கு இப்பொழதுதான் செய்தியை கொண்டு வந்து சேர்க்க முடிந்ததோ.
தந்தை தாயின் அரவணைப்புக்காக ஏங்கி நின்ற பிள்ளைகளுக்கு சோதிடன் சொல்வது போல் இது ஒரு பொன்னான காலம். அவர்களை போல் காலமெல்லாம் உழைத்து இன்றாவது என் மக்கள் என்னிடத்தில் ஒரு வார்தையை உதிர்த்து விட மாட்டாரா என்று நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு போக எம தூதன் அடிக்கடி அழைப்பதை நினைவு செய்து கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டு மீண்டும் மழலை வாழ்விற்கே சென்று கொண்டிருக்கும் பெற்றோர்களது ஏக்கமும் இன்று தெரியவந்துள்ளது அதே தூதுவனால்.

பொழுது போகமலே இருப்பதற்கு இவ்வளவு நாட்கள் தான் செய்த நல்லது என்ன உண்டு தீயது எவ்வளவு உண்டு என்று குறிப்பு எழுதிட இப்பொழுதுதான் நேரம் கிடைத்துள்ளது. இந்த தருணத்திலும் மனிதருக்கு பிறரை குறைப் பேகவும் மனம் திடமாகவே உள்ளது. இப்போதாவது திருந்திடாத இந்த ஜன்மம். ஏழை என்று ஒரு இனமே உண்டு என்று தெரியாதவருக்கும் அவர்கள் படும் துயர் தெரிகிறது. இனி இந்த நிலை மாறிட வேண்ணும் என்று உள்ளம் பாரதி போல் கொதித்து எழுகிறது. பிள்ளைகளின் தேவை என்ன? பெற்றோருடைய அன்றாட பிரார்த்தனை என்ன ? என்ற கேள்விகளுக்கு இந்த நாளில் தான் விடை கிடைக்கும் என்று இனைவனுடைய தீர்ப்பன்றோ.

அவரவர் குடும்பத்தில் அவரவருக்கு எந்த நிலையில் மரியாதை உண்டு, பயம் உண்டு, பாசம் உண்டு என்பதனை அறிந்திட இதுவே தருணமாகவும் உள்ளது. பேச நினைத்தவையெல்லாம் இப்பொழுது தான் பேச துவங்கப்பட்டுள்ளது. பயத்தில் மறைத்து வைத்திருந்தவைகள் எல்லாம் அம்பலத்தில் ஏற்றிடவும் அதனால் கோபமில்லாது பாச வலையால் திருத்திட செய்வதும் இப்போது தான் நடந்திட சித்திக்கப்பட்டதோ? மனிதன் மனிதநேயத்தோடு வாழத்தானே இறைவனும் ஆசை கொண்டான். காலமெல்லாம் கனவும் கண்டான். ஆனால் மனிதன் அவன் சொன்னதை கேட்க மறுத்தான். தண்டனை என்ற பெயரில் திருந்திட இதோ ஒரு வாய்ப்பையும் கொடுத்துள்ளான்.

கிடைக்கப் பெற்ற நேரத்தை கொண்டு தாயோடு, மனையாளோடு, சமைக்க பழகிக் கொள்ளுங்கள். பிள்ளைகளோடு பள்ளி பாடங்களை கற்றுக் கொள்ளுங்கள். நல்ல புத்தகங்களை வாசிக்க பழகுங்கள். மாலை நேரங்களிலே தேனீர் விருந்தோடு இனிய கானங்களை கேளுங்கள். குடும்பத்தோடு விளையாடி மகிழுங்கள். ஒவ்வொரு நாளும் மாலையில் ஒன்றாக பிரார்த்தனை செய்யுங்கள். செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கோருங்கள். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் பாரட்டிக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்.

பள்ளிகள் யாவும் அடைப்பட்டிருக்கலாம். ஆனால் இல்லம் என்ற பள்ளியறையில் பாடம் கற்றுக் கொள்ள இதுதான் தருணம். வயதை காட்டி பெரியவர் சிறியவர் என்ற பேதம் வேண்டாம். எல்லோரையும் சமநிலை படுத்தி பாருங்கள். உங்களிடத்தில் இன்றைய தேவைக்கு மேல் மிச்சமாக இருந்தால் இல்லாதவருக்கு கொடுங்கள். இன்று நீங்கள் கொடுப்பது நஷ்டம் அடைவதற்காக அல்ல, சேமிப்பிற்காக என்று உணருங்கள். ஒவ்வொருத்தருடைய ஏக்கங்களையும் பூர்த்தி செய்திட முன்வாருங்கள். இளம் பிராயத்து நண்பர்களோடு மனம் விட்டு பேசுங்கள். அன்றாடம் பார்க்கும் விஷயங்களின் அழகை ரசியுங்கள் குறைகள் புலப்படாது.

இனி கூண்டில் அடைக்கப்பட்ட மிருகங்களாய் இல்லாது மனிதனாக, அன்புமிக்கவனாக, அறத்தின் பால் செல்பவனாக, வாழவோம். அதுவரை வீட்டிலேயே பத்திரமாக இருப்போம். பொழுது விடியும் வரை காத்திருப்போம். 


Tuesday 28 April 2020

ஆலயம் சென்று வழிபாடு செய்பவர்கள் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்



ஆலயம் சென்று வழிபாடு செய்பவர்கள், என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதற்கு பல்வேறு தரிசன விதிமுறைகள் உள்ளன. ஆலய வழிபாட்டின் ரகசியங்கள் இதிலும் அடங்கியுள்ளன. எனவே ஆலய தரிசன விதிகளை ஒவ்வொரு பக்தரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஆலயத்துக்கு செல்லும் போது நீராடி, தூய ஆடை அணிந்து செல்ல வேண்டும். ஆலய கோபுரத்தை கண்டதும் கை கூப்பி வணங்க வேண்டும். அப்படி செய்வதால் தெய்வத்தின் காலடியை தொட்டு கும்பிடுவதாக நம்பிக்கை. கோபுர தரிசனம் பாவ விமோசனம் என்று சொல்லப்படுகிறது. பிறகு தல விநாயகரை வணங்கி உள்ளே செல்ல வேண்டும்.
கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றை வழிபட வேண்டும். இதைத் தொடர்ந்து துவார பாலகர்களை வழிபட்டு கருவறை முன்புள்ள விநாயகரை வணங்க வேண்டும்.

பிறகு கருவறையில் இறைவனை கண்ணார கண்டு, மனதில் இருத்தி வழிபட வேண்டும். அர்ச்சகர் தரும் திருநீறை கீழே சிந்தாமல் நெற்றியில் பூசுதல் வேண்டும். கருவறையை 3 தடவை வலம் வந்து வழிபடுதல் வேண்டும். சிவபுராணத்தை அல்லது இறைவன் திருநாமத்தை உச்சரித்தப்படி வலம் வருவது நல்லது.

முதல் முறை வலம் வரும் போது அம்பாள் சன்னதி, உற்சவர், நடராஜரை வழிபட வேண்டும். இரண்டாம் தடவை வலம் வரும்போது, முருகன், நவக்கிரகம், பைரவர், அறுபத்து மூவரை வழிபட வேண்டும். மூன்றாம் முறை வலம் வரும்போது தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டீகேசுவரரை வழிபட வேண்டும்.

சண்டீகேசுவரரை வழிபாடு செய்ததும் ஆலய வழிபாடு முழுமை பெறுவதாக அர்த்தம். இதையடுத்து மீண்டும் கொடி மரம் அருகில் விழுந்து வணங்கி, சிறிது நேரம் வடக்கு முகமாக அமர்ந்து விட்டு வீடு திரும்ப வேண்டும்.

இது பொதுவான, முறைப்படியான ஆலய தரிசனமாகும். இவை தவிர ரிஷிகளும், முனிவர்களும், நமது முன்னோர்களும் ஆலயங்களில் செய்யத் தக்கவை, தகாதவை என்று பல்வேறு தரிசன விதிகளை உருவாக்கி கொடுத்துள்ளனர். ஆகமங்களுக்கு இணையான அந்த விதிகள் வருமாறு:-

அவசர அவசரமாகவோ, கோபமாகவோ பூஜை செய்வதோ, ஆலயம் செல்வதோ கூடாது. குளித்து, தூய உடை அணியாமலும், நெற்றிக்கு இட்டுக் கொள்ளாமலும் கோவிலுக்குச் செல்லக்கூடாது. காலை சுத்தம் செய்யாமல் கோவிலுக்குச் செல்லக்கூடாது.ஈர உடையுடனோ அல்லது தூய்மைக் குறைவான உடையுடனோ கோவிலுக்குச் செல்லக்கூடாது.

அசைவ உணவு சாப்பிட்டு விட்டு கோவிலுக்குச் செல்லக்கூடாது. கோவிலுக்குள் வலம் வரும்போது வேக வேகமாக வலம் வரக்கூடாது. நிறை மாத கர்ப்பிணிப் பெண் தலையில் எண்ணெய் குடத்துடன் நடந்தால் எப்படி நடப்பாளோ அப்படி நடக்க வேண்டும். தாம்பூலம் தரித்துக் கொண்டு கோவிலுக்குச் செல்லக்கூடாது.

சட்டை அணிந்து கொண்டோ அல்லது போர்த்திக் கொண்டோ செல்லக்கூடாது. சட்டை அணியாமல் சென்றால், இறைவனின் ஈர்ப்பு அலைகளை நம் உடம்பு முழுமையாக பெற முடியும். கோவிலில் உள்ள விளக்குகளைக் கையால் தூண்டவோ, தூண்டிய கையில் உள்ள எண்ணை கறையை சுவரில் துடைக்கவோ கூடாது. சிலைகளைத் தொடுவதோ அல்லது சிலைகளின் திருவடிகளில் கற்பூரம் ஏற்றவதோ கூடாது. இறைவனுக்கு நைவேத்தியம் ஆகும்போது பார்க்கக்கூடாது.

விபூதி, சந்தனம், அபிஷேகம் தவிர சுவாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும்போது பார்க்கக்கூடாது. கோவிலின் உள்ளேயோ, மதில் சுவர்களிலோ எச்சில் துப்புதல் கூடாது. கோவிலின் உள்ளே சண்டை போடுதல், தலை வாரி முடித்தல், சூதாடுதல், சிரித்தல், காலை நீட்டிப் படுத்துக் கொள்ளுதல் கூடாது. சுவாமிக்கும் நந்திக்கும் குறுக்கே போகக்கூடாது. சிவ நிர்மால்யங்களைத் தூண்டுதல், மிதித்தல் கூடாது. கோபுரம், கொடிமரம், பலிபீடம், விக்கிரகம் ஆகியவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.

கோவிலுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு கொண்டு செல்ல வேண்டும். பிறர் பொருளைக் கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்யக்கூடாது. வீட்டில் தினமும் செய்யும் வழிபாட்டை செய்யாமல் நிறுத்தி விட்டு கோவிலுக்கு செல்லக்கூடாது. பிறர் வீட்டில் சாப்பிட்ட அன்று கோவிலுக்குச் செல்வது தவறு.

மரணத்தீட்டு உள்ளவர்களை தொட்டபின் குளிக்காமல் கோவிலுக்குச் செல்லக்கூடாது. கருப்பு வண்ண உடை அணிந்து கோவிலுக்குச் செல்லக்கூடாது. அர்ச்சகரிடம் இருந்து வாங்கி திருநீறு பூசிக் கொள்ளும் போது, சிவ, சிவ என்று உச்சரித்தப்படி பூச வேண்டும். ஒரு கையால் திருநீறு, குங்குமம் வாங்குதல் கூடாது. விபூதி, குங்குமம் பெறும் முன்பே அர்ச்சருக்கு தட்சனை கொடுத்து விட வேண்டும்.
சண்டிகேசுவரர் சிவ சிந்தனையில் இருப்பவர். எனவே அவர் முன் நின்று கை தட்டுவது, சொடுக்கு போடுவது கூடாது. அவர் மீது நூலினை போடுவதும், விபூதி, குங்குமத்தை போடுவதும் அபசாரம் ஆகும்.

இறைவனுக்கு சாத்தப்பட்ட திருநீறு, வில்வம், மலர்களை மிதித்து விடக்கூடாது. ஆலயத்துக்குள் யார் காலிலும் விழுந்து வணங்க கூடாது. ஆலய வழிபாட்டுக்கு குடும்பத்தோடு சென்று வருவது நல்லது. பரிகார தலத்துக்கு சென்றால் வேறு யார் வீட்டுக்கும் செல்லாமல் வீடு திரும்ப வேண்டும். யாரிடமும் கடன் வாங்கி ஆலயத்துக்கு செல்லாதீர்கள்.

எந்த ஒரு ஆலயத்துக்கு செல்லும் முன்பும் குல தெய்வ வழிபாட்டை அவசியம் செய்ய வேண்டும். முக்கிய பூஜைகளை நல்ல நேரம், திதி, ஹோரை பார்த்து செய்வது நல்லது. பொழுது போக்கை மனதில் வைத்துக் கொண்டு ஒரு போதும் ஆலயத்துக்கு செல்லாதீர்கள். ஆலயங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும் பின் ஒரு நாளும் இறந்தவர் வீட்டுக்கு செல்லாதீர்கள்.

பிரகாரத்தை வலம் வரும்போது அந்தந்த இறை சன்னதிக்கு ஏற்ப சுற்றி வழிபடுங்கள். திரை போட்ட பிறகு பிரதட்சணம் வேண்டாம்.
சுவாமி சன்னதியில் ஸ்தோத்திரம் சொல்லும் போது, மற்றவர்களின் அமைதி கெடாதபடி மனதுக்குள் உச்சரிக்க வேண்டும்.
நிறைய வேண்டுதல்களை சொல்லாதீர்கள். மற்றவர்களை கெடுக்கும் நோக்கத்துடன் இறைவனிடம் வேண்டாதீர்கள். முழுமையான மன அமைதியுடன் வழிபாடு செய்வது நல்லது.

மூலவருக்கு தீபாராதனை நடக்கும் போது கண்ணை மூடி வணங்காதீர்கள். இறைவனை கண் குளிர தரிசித்து வழிபடுங்கள். காலையில் விஷ்ணுவையும் மாலையில் சிவனையும் வழிபடுவது நல்லது.

ஆலய சன்னதிகளில் சூடம் ஏற்றுவதை தவிர்ப்பது நல்லது. சூடம் புகை மாசு ஏற்படுத்தும். அதற்கு பதில் நெய் தீபம் சிறந்தது.
சன்னதிக்கு பின்புறம் அமர்ந்து தியானம் செய்வது மிகவும் தவறு. அதை செய்யாதீர்கள். அது போல ஆலயத்துக்குள் இருந்து கொண்டு மற்றவர்களிடம் தற்பெருமை பேசுதல் கூடாது. ஆலயத்துக்குள் வந்து விட்டால் மனம் முழுவதும் இறைவனிடமே இருக்க வேண்டும்.
சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க இயலாவிட்டால், ஆலயத்திற்குள் நுழைவதற்கு முன்னதாக வெளியே அமர்ந்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கு காசை தானமாக வழங்குங்கள். கோவிலிருந்து வெளியே வரும் போது தானம் செய்யாதீர்கள்.

கருவறையில் இருந்து அருள்பாலிக்கும் தெய்வத்திற்கு அபிஷேகம் செய்யப்படும் போதும் திரையிட்டு சுவாமிக்கு பிரசாதம் வழங்கும் போது தெய்வத்தை வணங்கக்கூடாது. காலை நேரத்தில் கோவிலை சுற்றும் போது உடல் நலம் விருத்தியாகும். மாலை நேரத்தில் கோவிலை வலம் வருவதால் செய்த பாவங்கள் எல்லாம் தொலையும். இரவு நேரத்தில் சுற்றுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. கோவில் உண்டியலில் மறக்காமல் காணிக்கை பணம் செலுத்த வேண்டும்.

கோவில் விளக்குகளில் எண்ணை ஊற்றி எரிய வைத்தல், புதிய விளக்குகளை ஏற்றி வைத்தல், சிறியதாக எரியும் விளக்கு திரிகளை சரி செய்து எரிய தூண்டுவது புண்ணிய காரியமாக கருதப்படுகிறது. ஆலயத்தின் பிரதான வாயில் தவிர மற்ற வாயிலில் கோவிலுக்குள்ளே செல்லக்கூடாது. கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும் போது தெய்வத்தை வணங்கக் கூடாது. இரு சக்கர வாகனங்களில் மற்றும் காரில் பயணம் செய்யும் போது கோவிலுக்கு உள்ளே செல்லாமல் வெளியே இருந்து தெய்வத்தை கும்பிடுவது உகந்ததல்ல. இம்மாதிரியான செய்கை தெய்வத்தை அவமதிப்பதாகும்.

சிவன் கோவிலில் முதலில் சிவனை வழிபட்ட பிறகே சக்தியை வழிபட வேண்டும். விஷ்ணு கோவிலுக்குச் சென்றால் முதலில் மகாலட்சுமியை வழிபட்ட பிறகே விஷ்ணுவை வணங்க வேண்டும். விஷ்ணுவை வழிபடும் போது முதலில் பாதத்தை பார்த்து படிப்படியாக முகம் வரை பார்த்து வணங்க வேண்டும். மகாலட்சுமியை வணங்கும் போது முதலில் கண்களை பார்த்து படிப்படியாக பாதம் வரை பார்த்து வழிபாடு செய்தல் வேண்டும்.

ஆலயத்தில் இருந்து வீட்டுக்கு புறப்படும் போது சற்று அமர்ந்து செல்ல வேண்டும். ஏனெனில் சிவாலயங்களில் 7 சிரஞ்சீவிகள் தங்கி இருந்து சிவதரிசனம் செய்பவர்களை அவர்கள் வீடு வரை பின்தொடர்ந்து வந்து மரியாதை செய்வதாக சொல்வார்கள்.
எனவே அவர்களை வணங்கி, நீங்கள் இருங்கள். நாங்கள் சென்று வருகிறோம் என்று விடைபெற வேண்டும். இவ்வாறு முறைப்படி ஆலய தரிசனம் செய்தால் முழுப்பயனையும் பெறமுடியும்.

ஆலய வழிபாட்டின் ஒவ்வொரு அம்சமும் நம் வாழ்வியல் நெறிமுறைகளுடன் தொடர்புடையது. 

வாரிசை தேர்தெடுக்க துறவி வைத்த போட்டி – விக்ரமாதித்தன் கதை


காட்டின் வழியே வேதாளத்தை விக்ரமாதித்தியன் சுமந்து வந்து கொண்டிருந்த போது, அந்த வேதாளம் அவனிடம் இந்த கதையை கூறியது. சொர்ணபுரி என்ற நாட்டை மன்னன் வீரபாகு சீறும் சிறப்புமாக ஆண்டுவந்தான். ஆனால் அவனுக்கு வாரிசு இல்லை. தனக்கு பிறகு தன் நாட்டை ஆள வாரிசு இல்லையே என்று கவலை கொண்ட மன்னன், வீரமிக்க ஒருவன் தன் காலத்திற்கு பிறகு இந்த நாட்டை ஆளவேண்டும் என எண்ணினான். இதை பற்றி தனது மந்திரியிடம் ஆலோசித்தான்.
அப்போது இந்நாட்டின் எல்லையிலிருக்கும் ஆசிரமத்தில் ஒரு துறவி, இளைஞர்களுக்கு வீரக்கலைகளை கற்றுத்தந்து, அவர்களை மிகச்சிறந்த வீரர்களாக்குவதாகவும், அங்கு சென்று பார்த்தால் இந்நாட்டை ஆளும் தகுதியுடைய நபர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறினார். அதன் படி மன்னன் வீரபாகுவும், அவன் மந்திரியும் அந்த ஆசிரமம் சென்று தங்களின் எண்ணத்தை அந்த துறவியிடம் கூறினர். இதை கேட்ட அந்த துறவி, தான் அவர்களுக்கு உதவுவதாக கூறி, தனது ஆசிரமத்தின் மிகச் சிறந்த வீரர்களான ராமன், ஜெயன், கௌதமன் என்ற மூவரை அழைத்து, ஆளுக்கு ஒரு திசையில் பயணிக்குமாறும், ஒரு மாதத்திற்கு பிறகு இந்த ஆசிரமத்திற்கு திரும்பி வந்து தங்களின் அனுபவத்தை கூற வேண்டும் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
ஒரு மாதத்திற்கு பிறகு அந்த மூவரும் ஆசிரமத்திற்கு திரும்பினர். அங்கு மன்னன் வீரபாகுவும் அவனது மந்திரியும் அந்த துறவியுடன் இருந்தனர். அப்போது ராமன், தான் இந்த ஒரு மாத காலம் வடதிசை நோக்கி பயணித்ததாகவும், அப்போது ஒரு நாட்டின் மன்னனுக்கு எதிராக சில இளைஞர்கள் ஒருவனின் வழிகாட்டுதலின் படி புரட்சியில் ஈடுபட, காட்டின் மறைவான இடத்தில் ஆயுத பயிற்சி மேற்கொண்டிருந்ததாகவும், எனவே அக்கூட்டத்தின் தலைவனை தான் அம்பெய்தி கொன்று விட்டதாகவும் கூறினான். இப்போது ஜெயன், தான் தென் திசையை நோக்கி பயணித்ததாகவும், அந்த திசையின் பல இடங்களில் கொள்ளையர்களின் அட்டகாசங்கள் அதிகமிருந்ததால் அங்குள்ள இளைஞர்களுக்கு, தான் வாள் போர் கலையை கற்றுத்தந்து அவர்கள் தங்களை தற்காத்து கொள்ள தான் உதவியதாக கூறினான்.
மூன்றாவதாக கௌதமன், தான் கிழக்கு திசையை நோக்கி பயணித்ததாகவும், தனது வீரத்தை காட்டக்கூடியதற்குண்டான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லையென்றாலும் வழியில் காட்டின் ஓரத்திலுள்ள ஒரு குளத்தில் ஒரு குட்டி யானை சிக்கி தவித்ததைக் கண்டு, தான் அந்த ஊர் மக்களின் உதவியுடன் அந்த குட்டி யானையை மீட்டு அதன் கூட்டத்தில் சேர்த்ததாகவும், பிறகு மக்கள் அனைவருக்கும் பிறருடன் சண்டையிடாமல் வாழ்வதை பற்றி அறிவுரை கூறியதாகவும் கூறினான். இதையெல்லாம் கேட்ட வீரபாகுவும், அவன் மந்திரியும் வீரம் நிறைந்த காரியங்கள் செய்த ராமன், ஜெயன் ஆகிய இருவரில் ஒருவரை தங்கள் வாரிசாக தேர்ந்தெடுக்க முடிவு செய்தாலும் அந்த துறவியின் கருத்தை கேட்க விரும்பினர்.
சிறிது நேரம் ஆலோசித்த பின்பு கௌதமனை வாரிசாக தேர்ந்தெடுக்கும் படி கூறினார் அந்த துறவி. “விக்ரமாதித்தியா அந்த துறவி கௌதமனை வாரிசாக தேந்தேடுக்க கூறியது ஏன்எனக் கேட்டது வேதாளம்.
ராமன் ஜெயன் புரிந்தது வீரமிக்க செயல்கள் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் ஒரு நாட்டை நிர்வகிக்க வெறும் வீரம் மட்டும் போதாது. அம்மக்களிடம் உள்ள ஏற்றதாழ்வுகளை நீக்கி அவர்களிடம் ஒரு ஒற்றுமை உணர்வு ஏற்படுத்தும் திறன் வேண்டும். அது கௌதமனிடம் அதிகமிருந்தது. மேலும் கௌதமனுக்கு வீரத்தை காட்டக் கூடிய சூழ்நிலை தான் அமையவில்லையே தவிர அவன் ஒன்றும் கோழையல்ல. எனவே கௌதமனை வாரிசாக ஏற்கும் படி அந்த துறவி கூறினார்என விக்ரமாதித்தியன் கூறிய பதிலைக் கேட்டு வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.

மறந்து போகும் தமிழ் சான்றோர் - வ. உ. சிதம்பரம் பிள்ளை

  வ. உ. சிதம்பரம் பிள்ளை வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்த...