Thursday 25 January 2018

அழகன் முருகனும் தைப்பூசத் திருநாளும்; This Article Based on Thaipusam Festival



தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும்
இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்க வேல்
விடுங்கோ னருள்வந்து தானே யுமக்கு வெளிப்படுமே.”
அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரப் பாடல் நமக்கு உணர்த்த வருவது யாதெனில் மனத்தையும், ஐம்புலன்களின் வழியே செல்ல விடாமல் தடை செய்து, கோபத்தை அறவே விடுத்து ஏழைகளுக்கு மனப்பக்குவத்தை பெற்று அவற்றை பின்பற்றினால் ஏழு உலகங்களும் பிழைக்குமாறு கொடிய கோபத்துடன் கூடிய சூரபன்மனுடன் கிரௌஞ்ச மலையும் பிளந்து துகள்பட்டு அழியும்படி கூர்மையான வேலினை விடுத்து அருளிய தனிப்பெருந் தலைவரான திருமுருக பெருமானது திருவருளானது தானாகவே வந்து வெளிப்பட்டு நம்மை ஆட் கொள்ளும்  என்கிறார் அருணகிரியார் இப்பாடலின் மூலம்.
இத்துணை பெருமை தனை தன்னிடத்தே வைத்துக் கொண்டு வேண்டி வருவோருக்கு நன்மைகள் யாவும் செய்து நம்மை எந்த சூழ்நிலையிலும் ஆராதித்து தண்டாயுதபாணியாக காட்சி தரும் தமிழ் கடவுள் முருகனை வர்த்தைகளில் கட்டுப்படுத்த முயற்சிப்பது கடினம். அப்படிப்பட்ட முருகனை நல்லதொரு நாளில் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆராதிக்க வேண்டும் என்ற நோக்கில் திருவிழாக்கள் என்ற பெயரில் விழா எடுக்கத் துவங்கினர் நமது முன்னோர்கள். முருகனுக்கு விழா எடுப்பது என்றால் எந்த நாள் சிறப்பாக இருக்கும் என்று சிந்திக்கும் போது நமது முன்னோர்கள் பௌர்ணமி நன்னாளை தேர்வு செய்தனர். அநனால் தான், சித்திரையில் வரும் பௌர்ணமி அன்று சித்திர பௌர்ணமி, வைகாசி மாதம் வரும் பௌர்ணமி அன்று வைகாசி விசாகம், ஐப்பசியில் கந்தர் சஷ்டி, கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம், தை மாதம் தைப்பூசம், மாசியில் மாசி மகம், பங்குனியில் பங்குனி உத்திரம், என்று ஆறுமுகப்பெருமானுக்கு ஆறு முக்கிய திருவிழாக்கள்.
அதிலே நாடு தழுவிய அளவில் எல்லோரும் ஏற்று நடத்தும் திருவிழா, தை மாதம் வரும் பூச நட்ச்சத்திரத்தில் வரும் தைப்பூசம் ஆகும். ஆறுபடை வீடுகளில் பழனி திருத்தலத்தில் இந்த தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இத்தைப்பூச திருநாளை கொண்டாடுவதன் முக்கிய நோக்கத்தினையும் காரணத்தினையும் நாம் அறிந்திடல் வேண்டும். எதையும் காரணமில்லாது நமது முன்னோர்கள் செய்யவில்லை.
புராணம்
கையிலாயத்திலே முருகப் பெருமானுக்கு சக்தி வேல் கொடுத்த நன்னாளே தைப்பூசம். இந்த சக்தி வேலினை சிவப்பெருமான் கொடுக்க, அதிலே அம்பிகையின் ஆற்றல் பூரணமாகியிருக்க முருகப்பெருமான் பக்தி மேலோங்க பெற்று கொள்ளும் நாளாக தான் நாம் தைப்பூசம் கொண்டாடுகிறோம்.
பழனிக்கு வந்த தைப்பூசம்

சூரபத்மனின் குருவாகிய இடும்பன் என்னும் அரசுர குலத்தை சேர்ந்த அரக்கன் முருகப்பெருமான் மீது அளவிட முடியாத பக்தி கொண்டு எப்படி எம்பெருமானை ஆராதிப்பது என்பது தெரியாது குள்ள முனி என்றழைக்கப்படும் அகத்தியரிடம் உதவி நாடிட; அகத்தியரும் அதற்கான வழியை போதிக்கிறார்.
அகத்தியரின் போதனைப்படி இடும்பன் கையிலாயத்திற்கு சென்று சிவகிரி சக்தி கிரி என்ற இரண்டு மலைகளை கவட்டை கம்பு ஒன்றை எடுத்து அதன் இருமுனைகளில் கயிறு கட்டி தோலில் சுமந்து கொண்டு பழனி வந்து சேர்கிறார். இதுவே முருகனுக்கு எடுக்கப்பட்ட முதல் காவடியாகும். இந்த கவட்டை என்ற சொல்லில் இருந்து உருவானதே காவடி என்னும் பெயராகும்.

ஆக பழனியை அடைந்த இடும்பன் முருகனின் ஆணையால் சிவகிரி சக்தி கிரி என்னும் மலைகள் பழனியிலேயே நிலைக்கப்பட்டது. அத்தோடு இடும்பன் முருகனிடம் வரம் ஒன்றை வேண்டுகிறார். என்னைப்போல் உன்னை நாடி காவடி தூக்கி கொண்டு வரும் அடியாருக்கு உன் திருவடியை கொடு என்று. அதற்கு முருகப்பெருமான் இடும்பனுக்கு இரண்டு வரத்தை அருளுகிறார். அவை யாதென்றால், " இனி வரக்கூடிய காலங்களில் உனக்கு முதல் பூஜையும், இரண்டவதாக எனக்கும் பூஜைகள் நடத்தப்படும் என்று இடும்பனுக்கு வரம் நல்கினார் கந்தப்பெருமான்.

தமிழ் கடவுள் முருகன்
முருகனை தமிழ் கடவுள் முருகன் என்று அழைக்கப்படுவதன் காரணம் என்ன வென்பதனை புரிந்து கொள்வது அவசியமான வொன்று. தமிழில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு; முருகனுக்கு விழிகள் பன்னிரண்டு, கரங்கள் பன்னிரெண்டு. மெய் எழுத்துகள் பதினெட்டில் உதித்தது தான் முருகனின் நாமம். அதாவது, மெய்யெழுத்துகளில் உள்ள வல்லினம், மெல்லினம் மற்றும் இடையின எழுத்துக்களை பதம் பிரித்து எடுத்தால் முருகன் அருளுவான்.
மெல்லினம் - ங,,,,,          > மு
இடையினம் - ய,,,,,             > ரு
வல்லினம் - ,,,,,                  > கு
என்னும் வரிசையின் படி முருகு என்ற வார்த்தை உதயமாகிறது. முருகு என்றால் அழகு எனப் பொருள்ப்படும். அழகு என்ற சொல்லுக்கு முருகன் என்று பொருள் உண்டு.
இதனாலே முருகன் தமிழ் கடவுள் என அன்போடு அழைக்கப்படுகிறான்.
தைப்பூசத்திலே பிற சிறப்புகள்
திருஞானசம்பந்தரும் தைப்பூசமும்

நால்வர் பெருமக்களில் முதன்மையாக வைத்து போற்றப்படும் திருஞானசம்பந்தருக்கும் இத்தைப்பூச திருநாளுக்கும் ஒரு தொடர்பு உண்டு.
திருமயிலாப்புரிலே சிவநேசர் என்ற சிவனடியார் ஒருவர். அவருக்கு பூம்பாவை என்ற தவப்புதல்வி. திருஞானசம்பந்தருக்கு தான் மகளை உரியவள் ஆக்க வேண்டும் என்ற கொள்க்கையில் இருந்தார். ஒருநாள் பாம்பு ஒன்று தீண்டிட பூம்பாவை இறந்து போனால். சிவநேசர் தன் மகளின் உடலை சுட்டு அந்த சாம்பலையாவது திருஞானசம்பந்தரிடம் சமர்ப்பிக்க வேண்டுமென பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.
சம்பந்தர் தொண்டை நாட்டு யாத்திரையை முடித்து கொண்டு ஒற்றியூரில் சுவாமி தரிசனத்திற்காக வருகையளித்தார். சம்பந்தரின் வருகையை அறிந்த சிவநேசர் பூம்பாவையின் சாம்பலை எடுத்து கொண்டு ஒற்றியூருக்கு வந்து சம்பந்தரை சந்திக்கிறார். நடந்தவை அனைத்தையும் விவரமாக கூறிட சம்ப்பந்தர் சம்பாலையிருக்கும் பெண்ணின் உடலை மீட்க வேண்டி "ஆறாக் காதலினால்" என்ற பதிகத்தை பாடி சாம்பலாயிருந்த பூம்பாவையை உயிர் பெற்று எழுந்திட செய்தார். அந்நாளே தைப்பூசம்.
வடலூர் வள்ளலாரும் தைப்பூசமும்.

வடலூர் வள்ளலார் பெருமான் இறைவனோடு ஜோதியில் ஒன்றினைந்த நாளும் தைப்பூசம் அன்றே ஆகும். நமது உடல் என்பது சூரியன், மனம் என்பது சந்திரன், உயிர் என்பது அக்னியாகும். வடலூரிலே சூரியனும் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் சமயத்திலே அதாவது உடலும் மனமும் ஒன்றாயிருக்கும் சமயம் உயிர் என்ற அக்னியை ஏற்றி வழிப்பாடு செய்யப்படுகிறது இன்று வரை.
வேல்
வேல் என்பது ஞானத்தின் உருவாகும். முருகன் ஞான சக்தி, ஆக அவன் திருக்கரத்தில் இருப்பதுவோ ஞான வேல்.
அருணகிரிநாதர் கந்தர் அநுபூதியில் பாடுகிறார்
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழிநாசியோடும் செவியாய்
ஐவாய் வழிசெல்லும் அவாவினையே.
என்று. அதாவது முருகனை பற்றினால் உலக இன்பங்களில் தூங்குபவன் கைகளிலிருந்து விசிறி நழுவுவது போல் நழுவி விடும். முருகன் கைகளில் கதிர்வேல். கதிர் ஒளி வீசும் வேல். அந்த ஒளிப்பட்டால் உலக சிற்றின்ப இருள் அகலும். உய்வதற்குரியது உயிர். அந்த உயிர் நற்கதி பெறவேண்டும். எனவே அவா வினை விடுவாய் என்கிறார் அருணகிரியார். அவா என்றால் ஆசை வினை என்றால் இருவினை. இவை இரண்டையும் விடுவாய் என்று காட்ட இரண்டுமுறை ஒழிவாய் ஒழிவாய் என்றார். அவாவை ஒழி வினைகளை ஒழி இதற்கு முருகன் திருவடியில் மனத்தை வை என்பதுவே இப்பாடலின் அறிவுரை. (விளக்கம் - பொற்கிழி கவிஞர் சொ.சொ.மீ. சுந்தரம்)

ஆக ஞானத்தை பெற்று விட்டால் ஆசை என்ற மாயையை விட்டு விடலாம் என்பது திண்ணம். அத்தோடு இந்த வேலினை ஞானத்தோடு ஏன் ஒப்பிடுகிறோம் என்ற உண்மையை புரிந்து கொள்வது அவசியம்.
நமது ஞானம் மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. அவை ஆழ்ந்து, அகன்று, கூர்ம்மையாகவும் என வகுக்கப்படுகிறது. இதனை யார் நமக்கு தெளிவுபடுத்துகிறார் என்றால் மாணிக்கவாசகர் சிவப்புராணத்திலே அழகு தமிழில் விவரிக்கிறார்.
"ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே"
என்று. நமது ஞானம் என்பது ஆழ்ந்த சிந்தனையோடும், அகன்ற அறிவோடும், இறுதியாக கூர்ம்மையை போன்ற தெளிவோடும் இருத்தல் வேண்டும். இதுவே வேலின் தத்துவம்.
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப்பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனும் நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத்துணை அவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே.
என்று கந்தலரங்காரப்பாடல் நமக்கு வேலின் பெருமையை மேலும் விளக்குகிறது. நமது கண்களுக்குத் துணையாவது திருமுருகப் பெருமானது புனிதமான மென்மையான திருவடிகளே ஆகும். இன்னும் சொன்னால் முருகா என்ற சொல் பன்மடங்கு துணையை கொடுக்கிறது. ஆக செய்த வினைகளை போக்கிட அருளுவது, அவனது பன்னிரு திருக்கரங்களும் ஆகும். அத்தோடு தனிமையான வழிக்கு என்றும் துணையாக விளங்குவது கந்தவேளின் திருக்கரத்தில் இருக்கும் கூர்ம்மையான வேலாயுதமாகும் என வேலின் சிறப்பினை இப்படி எழிய நடையில் சொல்கிறார் அருணகிரியார்.

தைப்பூசக் காலங்களில் நாம் காணும் அவலங்கள்
அர்ச்சனை பொருட்கள்
இறைவனை மனமுருகி பிராத்தித்து அவனருள் வேண்டி அர்ச்சனைகளையும் செய்த பின்னர், ஒரு சிலர் அர்ச்சித்த தேங்காய் பழங்களை உடன் கொண்டு செல்லாது, அதனை ஆலயங்களில் உள்ள மூலைகளில் விட்டுவிட்டு தட்டை மட்டும் கொண்டு செல்கிறார்கள். இன்னும் சிலர் அதில் உள்ள விபூதிகளையும் கண்மூடித்தனமாக ஆலய தூண்களில் வீசிவிட்டு செல்கிறார்கள்.
அன்பர்களே,

இவ்விடத்தில் ஒரு விஷயத்தை நாம் சற்று தெளிவுபடுத்தி கொள்வது மிகமிக அவசியமானவொன்று. இறைவனை அர்ச்சித்த விபூதியையே நாம் ஆலயத்தில் பெற்று கொள்கிறோம். அது மட்டுமல்லாது இறைவனின் நேரடி திருவருளை பெற்றவை அவை.
அதனால் தான் ஞானசம்பந்தர் சொல்கிறார்,
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயன் திருநீறே.
எத்துணை புண்ணியம் செய்திருந்தால் நாம் இந்துக்களாக பிறந்து இத்துணை பெருமை மிகு சுக போகங்களை அனுபவிக்கும் பாக்கியத்தை பெற்றிருப்போம்.
நமது இந்து சமயத்தில் திருநீறு அணிவதன் காரணம் இந்த உடலைவிட்டு உயிர் போன பின்னர், பிடி சாம்பலாய் தான் போகிறது ஆகவே, வாழும் காலங்களில் நம்முள் குடியிருக்கும் மூம்மலங்களாகிய ஆணவம், கன்மம் மற்றும் மாயையை விட்டு இறைவனை சரணகதி அடைய வழிக்காட்டும் தத்துவத்தை உள்ளடக்கியுள்ளது இந்த திருநீறு.
ஆகவே ஆலயத்தில் கொடுக்கும் சிவ பிரசாதத்தை முறையே பயன்படுத்துவதே சிறப்பாகும். அத்தோடு சிவ கணங்களின் கோபத்திற்கு ஆளாகமல் நம்மை காத்து கொள்ள இது சிறந்தோர் மார்க்கமாக அமைகிறது.
உணவு
நம்மில் அதிகமானோர் செய்யும் தவறுகளில் இந்த உணவுக்கும் ஒரு வகையில் பங்கு உண்டு. எப்படியென்றால் போதிய அளவு உண்டு விட்டு வீட்டிற்கு பொட்டலம் கட்டி செல்வது. ஆலயங்களில் நடைப்பெறும் மகேஸ்வர பூஜையானது ஏழைகளின் வயிறும் மனமும் நிறையவே. ஆக இந்த ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் எத்துணையோ, பேர் இன்றும் உள்ளனர். அதே வேளையில், ஆலயத்திற்கு வந்திருக்கும் அனைவரும் உண்டு மகிழ வேண்டுமே என்று நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். நாம் மட்டுமே உண்ண வேண்டும் என்ற சுயநலத்தை ஒழித்திட வேண்டும். அதுமட்டுமல்லாது, உணவை உண்ட பின்னர் எச்சில் இளைகளை உண்ட இடத்திலேயே வீசி விட்டு போகுதல் போன்ற செய்கை அனைத்தும் பாவத்திற்கு உரிய செயலாகும். இவையாவும், சிவ கணங்களின் கோபத்திற்கு நம்மை ஆளாக்கி கொள்வதற்கு சமமான செயல்கள் ஆகும்.
காவடி ஆட்டத்தில் வந்த அவலம்

இப்பொழுதெல்லாம் முருகனுக்கு காவடி எடுத்தது போய் இடும்பனுக்கும், முனியாண்டி தெய்வமாகிய காவல் தெய்வங்களுக்கு எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். மது அருந்தி கொண்டும், புகைப்பிடித்து கொண்டும், பக்தி என்ற போர்வையில் உடல் முழுவதும் முள் குத்தி கொண்டும், அகோர வேடங்களிலும் முருகனுக்கு நேர்த்தி கடன் செலுத்துவது நமது சமயத்திற்கு ஏற்ற செயல்கள் ஆகாது. இறைவன் எந்த காரணத்தை கொண்டும் நம்மிடத்தில் உடலை வருத்தி கொண்டு பிராத்தனைகள் செய்திட சொல்லி கேட்கவில்லை. அவன் நம்மிடத்தில் பக்தியையும் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறார் என்பதுவே உண்மை. இது போக, இளைய சமூகத்தினரின் தெரு கூத்து ஆட்டங்கள் யாவும் நமது சமயத்தை இழிவுபட செய்யும் செயல்களே ஆகும். பிற இனத்தவர் நம்மை துச்சப்படுத்தும் வகையில் நடந்து கொள்வது நம் முகத்தில் நாமே காரி உமிழ்வதற்கு சமமாகிறது.
இறைவனிடத்தில் எதை வேண்டுதல் வேண்டும்
வள்ளலார் முருகப் பெருமானிடத்தில் எதனை வேண்டுதல் வேண்டும் என்று பல வருடங்களுக்கு முன்னரே நமக்கு போதித்து விட்டார். அவை யாவன என்பதனை பின்வரும் பாடலின் வழி பார்ப்போம்.
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசை மறக்கவே வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்தில்
வளர் தலமோங்கு கந்தவேளே!
தண்முகத் தூய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே!
அழகான தமிழில் தெளிவாக நமக்கு வள்ளலார் பெருமான் போதித்து விட்டார் இப்பாடலில். ஆக இறைவனிடத்தில் விலைமிக்க பொருளையும், நமது ஆசைக்கு மிஞ்சியவற்றையே கேட்டு கொண்டிருப்பதை விடுத்து உள்ள உருகி இந்த துதிப் பாடலை ஒதிட இறைவன் நம் தேவையை அறிந்து அருளுவான்.
எதனை முருகப்பெருமான் நமக்கு அருளுவான் என்று கேட்டால் அருணகிரிநாதர் பதில் தருகிறார்,
கார்மா மிசை காலன் வரின் கலபத்
தேர்மா மிசைவந்து எதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே
காலன் வரும் முன்னர் கந்தன் வரவேண்டும் என்பது இப்பாடல். மாமர வடிவில் சூரன் வந்த போது அவனை இரண்டு கூறுகளாகப் பிளக்கும் படி வேலைச் செலுத்திய வேலாயுத பெருமானே! கருப்பு விலங்கான எருமை வாகனம் மீது எமன் என்னை நாடி வருவதற்கு முன்னர் மயில் வாகனத்தில் நீ அமர்ந்து கொண்டு விரைந்து வர வேண்டும். காலன் என்னை அணுகாமல் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகிறார்.
அந்தகனும் எனை அடர்ந்து வருகையினில்
அஞ்சல் எனவலிய                            மயில்மேல் நீ
அந்த மறலியொடு கந்த மனிதன் நமது
அன்பனெனை மொழிய           வருவாயே.
என்பது திருப்புகழ். முருகன் அடியார்கள் பால் எமன் வரமாட்டான். அதனால் தான் கார்மாமிசை காலன் வரின் என்றார். ஒரு வேளை அவன் வந்தால், நீ வந்து காக்க வேண்டும் என்பது  வேண்டுகோள்.
அதே போல் மற்றுமொரு இடத்தில்
மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றன் வந்தால்
                                                                             என்முன்னே
தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்
என்று கந்தரலங்காரத்தில் இதே வேண்டுக் கோளை வைக்கிறார் அருணகிரிநாதர்.
அதுமட்டுமல்லாது மற்றுமொரு பாடலில் அருணகிரிநாதர் சொல்கிறார்,

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா!
அடிஅந் தமிலா அயல்வே லரசே!
மிடிஎன் றொருபாவி வெளிப்படினே.
அருணகிரியார் முருகனை அழைத்து வறுமையின் கொடுமையை கூறுகிறார். மெய்ஞானமாகிய கூர்வடிவேலைத் தாங்கிய அரசே! செல்வனாய் இருப்பனுக்கு அவனது தீவினை பயனால், வறுமை என்று சொல்லப்படும் ஒரு பாவி, ஊரறிய வெளிப்பட்டு தோன்றினால் அவனை விட்டு முதலில் தனம் போய்விடும். வறுமை வரும். இதனால் அவனுடைய அறஞ்செய்யும் மனம் போய்விடும். உயர்ந்த குடிபிறப்புக்கான தன்மைகள் போய்விடும். ஈகை முதலிய நல்ல குணங்கள் போய்விடும். சுற்றத்தாரும் அவனைவிட்டு வேறிடத்திற்கு போய்விடுவார்கள் என்கிறார் அருணகிரியார்.
இதன் மூலம் வேறொரு செய்தியைக் கூறுகிறார். வள்ளல் முருகனிடத்தில் வறுமையின் கொடுமையை சொல்வது போல உன்னைத்தொழும் அடியார்களுக்கு வறுமை வந்தால் நீ அருள வேண்டும் என்கிறார் அருணகிரியார். இது பொருள் வறுமை அல்ல, அருள் வறுமை. உன் திருவடியை நினைப்பது செல்வம். மறப்பது வறுமை. இந்த வறுமை வந்தால் அவர்களுடைய மனமும் உயிரில் விளங்கும் அருள் ஒளியும் அடிமைத் திறமும், அடியார் கூட்டமும் எவ்வுயிரும் தம்முயிராய் எண்ணும் அருட்பண்பும் ஒன்றன் பின் ஒன்றாக நீங்கி விடும். இந்த நிலை வரக்கூடாது. முருகா! உன் திருவடிகளை நினைத்துச் செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே என்று வாழ்த்துகிறோம். இந்த அருட்செல்வம் போய் வறுமை போய் வராமல் காப்பாற்ற வேண்டும் எனக் குறிப்பாக வேண்டுகிறார் அருணகிரியார். ( விளக்கம் - பொற்கிழி கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம்)
மேலும் முருகப்பெருமானை வணங்கிட அருணகிரியார் சொல்கிறார்
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங் குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
அதாவது தீய நாட்கள் அடியேனை என்ன செய்யும்? அடியேனைத் தேடிவந்த நவக்கிரங்கள் என்ன செய்யும்? கொடிய இயமனால் தான் என்ன செய்ய முடியும்?  குமரக்கடவுளின் இரண்டு திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும் தண்டைகளும் ஆறு திருமுகங்களும் பன்னிரு தோள்களும் கடப்ப மலர் மாலையும் அடியேனுக்கு முன் வந்து தோன்றிடும் போது இவற்றுள் எது என்னை நெருங்கிவிடும் என்கிறார் இந்த கந்தரலங்காரத்திலே.
ஆகவே, இறைவனை பக்தியால் துதித்து அடியார் பெருமக்கள் அருளிய மந்திர ஆற்றல் மிக்க பாடல்களை ஒதி மனமுருகி பிராத்தனை செய்து அவனருள் பெறுவோமாக.
சிவாய திருச்சிற்றம்பலம்.

- விக்ரமன் பொன்ரங்கம்

No comments:

Post a Comment

மறந்து போகும் தமிழ் சான்றோர் - வ. உ. சிதம்பரம் பிள்ளை

  வ. உ. சிதம்பரம் பிள்ளை வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்த...